Friday, April 29, 2011

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011



குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு 8-5-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பகல் 2.14 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.

17-5-2012 வரை குரு பகவான் மேஷ ராசியி லேயே சஞ்சாரம் செய்கிறார். இந்த குருப் பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்ப ராசி நேயர் களுக்கு அசுப பலன்களும்; மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசி நேயர்கள் ஏற்றமான பலன்களும் உண்டாகும். அசுப பலனை அடையும் நேயர்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. இதனைப் படித்து அனைவரும் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
முருகு இராசேந்திரன்

மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கும் மேஷ ராசி நேயர்களே! பொன்னவனான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களது பொருளாதார நிலையானது சிறப்பாகவே இருக்கும். என்றாலும் மற்றவர்களுக்குப் பணம் கொடுப்பது- வாங்குவது போன்றவற்றில் கவனமுடன் இருப்பது உத்தமம். சாயா கிரகங் களான ராகுவும் கேதுவும் 6-6-2011 முதல் 2-ல் கேதுவும்; 8-ல் ராகுவும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குடும்ப வாழ்வில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். என்றாலும் பெரிய கெடுதல்கள் இல்லை. ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனி பகவான் 15-11-2011 வரை 6-ஆம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் எதிலும் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், உத்தியோகம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகளும் லாபங்களும் உயர்வுகளும் உண்டாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சனி பகவான் 15-11-2011 முதல் 7-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் குடும்பத்தி லுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது மிகவும் உத்தமம்.

ஆரோக்கியம்

உங்களின் உடல்நலனில் சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டு மறையும். மனைவி வழியிலும் சின்னச் சின்ன உடல்நலக் குறைவுகள் ஏற்படும். புத்திர வழியில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறையும். சிலருக்கு உஷ்ணத் தொடர்புள்ள நோய் ஏற்பட்டு விலகும்.

பொருளாதார நிலை

பொருளாதார வளர்ச்சியில் தன வரவு திருப்தியாக இருக்காது. பழைய கடன்கள் சற்று குறையும். வழக்கு, விவகாரங்களில் இழுபறியான நிலையே காணப்படும். சொத்து வகையில் லாபம் இராது. அரசு வகையில் அனுகூலம் இராது.

குடும்பம்

கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. புத்திர வழியில் புதுப்புதுச் செலவைக் கொடுக்கும். உறவினர், நண்பர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகளில் தாமத பலனை உண்டாக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உங்களது வருமானம் மிகவும் குறையும். தேவைக்குத் தகுந்த அளவில் மிகவும் கடினமாக உழைக்க நிர்ப்பந்தங்கள் ஏற்படும். தொழில்ரீதியாக வீணான அலைச்சல்கள் அதிகமாகும். உயர் அதிகாரிகள் ஆதரவு சற்று குறையும். பதவி உயர்வு உரிய நேரத்தில் கிடைக்காது.

தொழிலாளர்களுக்கு:

முதுகெலும்பு உடைய உழைத்தாலும் வேலைப் பளுதான் கூடுமே தவிர காரியம் ஆகாது. பல அதிருப்தியான நிகழ்வுகளே உண்டாகும். எதிலும் நிதானம் தேவை. சோதனைகள் உண்டா வதைத் தவிர்க்க முடியாது. அதிகாரிகளின் கெடுபிடியும் கடன் வாங்கும் சூழ்நிலையும் அமையும்.

பெண்களுக்கு:

திருமண முயற்சிகள் தடை, தாமதம் கொடுக்கும். குடும்பத்தில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். புத்திர வழியில் புதுப்புதுச் செலவை உண்டாக்கும். பிறரிடம் இரவல் நகை வாங்குவது கூடாது. பணிபுரியும் பெண்களுக்கு சில சங்கடங்கள் தோன்றி மறையும்.

கலைஞர்களுக்கு:

புதிய ஒப்பந்தங்கள் மேலும் மேலும் ஏற்பட்டாலும் உங்கள் மனதில் நிறைவு காணப்படாது. உழைப்பிற்குரிய சாதகமான பொருள் சேர்க்கையும் உண்டாகாது. ரசிகர்களின் ஆதரவும் குறையும். அரசு வழியில் கிடைக்கக்கூடிய விருது கிடைக்கத் தடை, தாமதம் உண்டாகும்.

விவசாயிகளுக்கு:

எதிர்பார்க்கும் விளைச்சல் இருக்காது. மகசூலில் பெரிய நஷ்டம் உண்டாக இடமுண்டு. அரசு வழியில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை உண்டாகும். புன்செய் மகசூல் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காது. ஆழ்கிணறு தோண்டுவதைத் தவிர்க்கவும்.

இளைஞர்களுக்கு:

வேலை வாய்ப்புகளில் தடை, தாமதம் உண்டாகும். தன வரவுகள் ஓரளவு கிடைக்கப் பெறும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரப் பழக்கத்தில் நிதானம் தேவை.

மாணவர்களுக்கு:

நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. அவர்களால் நற்பலன் இராது. அதிக தூரப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். விளையாட்டுப் போட்டி களில் தடை உண்டாகும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

உங்களின் உடல்நிலை பாதிக்கும். புத்திர வழியில் மனக் குழப்பத்தையும் வீண் செலவையும் உண்டாக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். தேவையில்லாத அலைச்சல் டென்ஷனை உண்டாக்கும். அரசு வழியில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சிகள் தடைப்படும். பிறருக்கு ஜாமீன் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். குடும்ப வாழ்வில் முழு நிம்மதி இருக்காது. புதிய கடன்கள் எதிர்பாராத வகையில் தோன்றும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் இடையூறு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலை ஏற்படுத்தும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

உங்களின் தேகநலன் சுமாராகவே இருக்கும். குடும்பத்தில் பொருள் வரவில் மந்தமான நிலைகளும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் சண்டை, சச்சரவுகளும் உண்டாகியபடியே இருக்கும். புத்திர வழியிலும் சிறிது மன வருத்தங்கள் உண்டாகும். எதைக் கண்டும் அஞ்சாத மனஉரம் வேண்டும். மாணவர்கள் எதையுமே தைரியமாகச் செய்ய வேண்டும். எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெற முடியும். எதிலும் ஈடுபடும்போது அதிக கவனம் தேவையாகும். சொந்த முயற்சியினால் படிப்படியான ஏற்றம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் சுமாரான நற்பலன்களையே ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே உறவு முறை சுமாராகத்தான் இருக்கும். தேவையில்லாத பயணத்தால் அலைச்சல்கள் வரும். நண்பர்கள், உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக அமைவார்கள். புதுமுயற்சியில் நிதானம் தேவை.

குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

உங்கள் தேக ஆரோக்கியம் சுபிட்சமாகக் காணப்படும். எடுத்த காரியம் எல்லாவற்றிலும் ஏற்றத்தையும் உயர்வினையும் கொடுத்த படியே இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் அதிக சந்தோஷம் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் இருப்பார்கள். சிலருக்கு வீடு, வாகனங் களை வாங்கக்கூடிய யோகமும் ஏற்படும். பொருளாதாரரீதியாக எதிர்பாராத வரவுகள் தொடர்ந்து உண்டாகி பூரிக்கச் செய்திடும். கொடுக்கல்- வாங்கல் அமோகமாக இருக்கும். செல்வங்களும் செல்வாக்குகளும் மிக அற்புதமாகவே இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அமையும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

உங்களின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவை தவிர்க்க முடியாது. உங்கள் நண்பர்களும் உறவினர்களும் பகையாக மாறு வார்கள். எனவே எதிலும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். சிலர் கடல்கடந்து வெளிநாடு செல்லும் அமைப்பு; மனைவி, குழந்தைகளைப் பிரிந்து ஜீவனம் செய்யக்கூடிய நிலையும் உண்டாகும். மற்றும் சிலருக்கு ஸ்தல தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும். காரியங்களை வேகமாகச் செயல்படுத்த முடியாது. பொருள் விரயம், புத்திர வழியில் செலவு, தொழில்ரீதியாக மாறுதல், கூடுதல் பணி, குறைந்த ஊதியம் போன்ற சங்கடங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்குத் தடை ஏற்படும் நிலை உண்டாகும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும் நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

உங்களுக்கு உடல்நிலைகளில் பாதிப்புகள் ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஓரளவுக்கு குறைந்து காணப் படும். உத்தியோகத்தில் அதிகமான நற்பலன்களைக் கொடுத்தாலும் அதை அனுபவிக்க முடியாது. கணவன்- மனைவி இடையே சிறிது ஒற்றுமைக் குறைவு உண்டாகும். அசையா சொத்து வகையில் செலவைக் கொடுக்கும். அரசு வழியில் உதவிகள் தாமதப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் உறவினர்களால் இடையூறு உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி தருவது, ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. செய்கின்ற தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் சற்று குறையும். கூட்டுத் தொழிலில் நிதானம் தேவை. கலைஞர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் எதிலும் அக்கறையுடன் செயல்படுவது நல்லது.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்

உங்களின் தேகநலன் சுமாராகவே இருக்கும். புத்திர வழியில் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமையில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படும். அரசு வழியில் உதவிகள் தாமதத்துடன் கிடைக்கப் பெறும். பெரிய முதலீட்டில் புதிய தொழிலை சிறிது காலம் தள்ளி தொடங்கலாம். கூட்டுத் தொழிலினால் பல சங்கடமான நிலைகளையும் மேற்கொள்ள நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்துடன் செயல்பட்டால்தான் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காது. கலைஞர்கள் சுமாரான தன வரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் மறைந்து ஓரளவு ஏற்றம் உண்டாகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

எதிலும் நிதானமுடன் செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபார நிலையில் சற்றே சாதகமான நிலை காணப்பட்டாலும் பெரிய தொகைகளை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களின் கல்வியில் கடின உழைப்பு தேவை. குடும்பத்தில் கடன் தொல்லைகள் சற்று குறையும். கலைஞர்களின் பெயர், புகழ் சுமாராகவே இருக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

பொருளாதாரரீதியில் படிப்படியான பண வரவுகள் உண்டாகும். சில சமயம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு விலகும். மாணவர்கள் கல்வியில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. பிறருக்கு வாக்குறுதி தருவது, ஜாமீன் தருவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகள் நெருங்கியவர்களிடம் கவன மாக இருக்க வேண்டும்.

கிருத்திகை 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:

உடல்நலம் சற்று பாதிப்படையும். குடும்பத்தில் ஜீவனரீதியாக சிறுசிறு சங்கடங்களை ஏற்படுத்தும். மாணவர்கள் முழு கவனத்துடன் படித்தால் உயர்வினை அடைய முடியும். அலைச்சல், டென்ஷன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தாமதித்து வரும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட நிறம்: ஆழ்சிகப்பு.
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட கல்: பவளம்.
அதிர்ஷ்ட தெய்வம்: முருகன்.

பரிகாரம்:

இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்யவிருப்பதால் தொடர்ந்து குரு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற ஆடையும் கொண்டைக் கடலையால் செய்த மாலையையும் சாற்றி அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றுவது உத்தமம். 6-6-2011 முதல் கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிக்க இருப்பதால் ராகு- கேதுவுக்கு பரிகாரம் செய்வது, சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

No comments: